வியாழன், 22 ஜூன், 2017

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.


படித்ததில் பிடித்தது...

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.

எழுதியவர்: முபாரக் அலி. பாகிஸ்தானின் வரலாற்று பேராசிரியர்!

தமிழில்: மொழிபெயர்ப்பு: நா.தருமராஜன்.

வெளியீடு: என்.சி.பி.எச்.

     வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக்கருத்து --- இது பதிப்புரை.

     முனைவர் முபாரக் அலி தொழில்முறை வரலாற்றாசிரியர்களிடமிருந்து தனித்து, மசூதிகள், மற்றும் அரசவைகளில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தானின் வரலாற்றை சாதாரண மக்களை நோக்கித் திருப்பினார். தெளிவான நடையில் வரலாற்று நூல்களை எழுதினார் -- மாணவர்களும் அரசியல்வாதிகளும் விரும்பும் வண்ணம்! அதிகாரபூர்வ வரலாறுகளில் உள்ள தவறுகளையும் பிரச்சாரத்தையும் வன்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டால் வரலாறு தன்னுடைய படைப்புத் திறனை இழந்துவிடுகிறது என்றும் மக்களுடைய சிந்தனா சக்தியை தூண்டுவதற்குப் பதிலாக அதை உறைய வைக்கிறது என்றும் சொல்கிறார்.
--- இது: முனைவர் ஸையது ஜாபர் அஹமது
கராச்சி பல்கலைக்கழகம், கராச்சி.

    இந்த புத்தகத்தின் வெறும் 140 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக,தெளிவான நடையில் தமது நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் இருக்கின்ற நிலையினை எடுத்துக் கூறுகிறார் முபாரக் அலி. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு வந்த அரசின் தலைவர்களும் அதன்பின் அடுத்தடுத்து வந்த அரசுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் சிறு சரிவுகளுக்குக்கூட மதத்தையும் மதத் தலைவர்களின் தொடர்புகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிகாரத்தைத் தங்கள் கையிலிருந்து செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்நாட்டின் மதம்தான் முக்கியம்; அதனால் மதவழி மீறாமல் அதன்வழியே ஆட்சி நடத்துவது போன்ற பாவனையை ஏற்படுத்தி மதத்தலைவர்களை திருப்தி செய்து, அவர்களை வைத்தே எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தி அரசியல்வாதிகள் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; அதே நேரத்தில் மதவாதிகளும் மதத்தையும் மக்களையும் காட்டிக்காட்டி அரசியல்வாதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

   மேற்கண்ட நிலை தொடர்ந்தபோது அரசியல்வாதிகளின் தகுதிகள் குறையத் துவங்கி மதவாதிகளின் கை ஓங்கி மதத்தின் பல வலுப்பெற்ற உட்பிரிவுகள் தாங்களே பல மதவாதக் கட்சிகளைத் துவக்கிக்கொண்டன; மக்களின் மத உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியதிகாரம் பெற மதம் விரும்புகிறது; அரசியலும் மதமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன.

   இஸ்லாமிய மத போதனைகளில் எந்த புதிய விளக்கங்களும் புதிய மாற்றங்களும் ஏற்க்கப்படக்கூடாது என்பதில் பாகிஸ்தானிய மதவாதிகள் மிகத் தெளிவாக உள்ளார்கள்; அதிலும் இந்திய இஸ்லாமிய அறிஞர்களின் எந்த புதிய விளக்கங்களும் தவறிக்கூட தங்கள் நாட்டில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

   மேலும், இந்நூலில் பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசும் எவ்வாறெல்லாம் மதத்தைப் பயன்படுத்தின என்றும், ஒவ்வொரு சர்வாதிகாரியும் எப்படி மதத்தைப் பயன்படுத்தினர் என்றும், அந்நாட்டிற்கான வரலாற்றை அமெரிக்கர்களை வைத்து எழுதியதையும், இந்தியா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை மாற்றி எழுதுவதையும் தமது பாகிஸ்தானின் வரலாற்றைத் தங்களவர்களே தவறாகத் திரிப்பதையும் எழுதி மனம் புழுங்குகிறார் அதன் ஆசிரியர் முனைவர்.முபாரக் அலி!

   மதத்தைக் கைக்கொண்ட எந்த ஒரு நாடும் இப்படித்தான் இருக்கும் என்றும், நமது நாட்டில்கூட ஒரு சில வேற்று மதவெறியர்களின் செயல்களுக்காக மாற்று மதவெறியின் ஆட்சி தேவையா என்று அச்சம் ஏற்படுவது இயல்புதானே! நன்றி!

   இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

படித்ததில் ஒன்று

    திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல.

  கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்குஉயிரான காதலர்கள்.தங்கள் வீடுகளில்மணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக்கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

   என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

    இது விமர்சனம் அல்ல.மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே!ஒரு சிறு குமிழிதான்!

நன்றி!

வெள்ளி, 16 ஜூன், 2017

நாங்க அப்பவே அப்படித்தான்!

    1984. எம்ஜியாரின் ஆட்சிக்காலம். நான்கு சட்டமன்ற இடத்துக்கான இடைத் தேர்தல். திமுக தலைவர் கருணாநிதியின் விலகலால் அண்ணாநகர், திமுக
உறுப்பினர் மாயவரம் கிட்டப்பா மறைவின் பொருட்டு, மாயவரம் இன்றைய மயிலாடுதுறை,   மற்றொரு திமுக உறுப்பினர் N.நடராஜன் மறைவின் காரணமாக தஞ்சாவூர், மற்றொரு உறுப்பினரின் விலகல் காரணமாய் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டது.
   

    தேர்தல் முடிவு இரு கட்சிகளுக்கும் இணையாக அமைந்தது. அண்ணாநகர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளைத் திமுகவும், தஞ்சை மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளை அதிமுகவும் என்ற வகையில் தாங்கள் வென்ற தொகுதிகளைத் தக்க வைத்துக்கொண்டன.


   இதில் சென்னைவாசியான, திமுக வெறிகொண்ட* இளைஞனான நான் உள்வாங்கிய அண்ணாநகர் தொகுதியின் சில சம்பவங்களைப் பதிவிடவே இப்போதைய எண்ணம்.

   அண்ணாநகர் தொகுதியானது மேற்குப் பக்கம், உள்ள 11வது மெயின் ரோடு எனும் அப்போதைய பேருந்து நிறுத்துமிடத்தோடு முடிந்துவிடும். அதற்கடுத்து திருமங்கலம் பகுதி தொடங்கிவிடும். நானும் எனது நண்பனும் அப்போது அந்தப் பகுதியில்தான் இருந்து வந்தோம். நாங்கள் இருவருமே திமுகவினர் என்பதால் பக்கத்துத் தொகுதியில் இடைத் தேர்தல் எப்படித்தான் நடைபெறுகிறது என்பதையும் இயக்கத்துக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மனச்சாந்தி பெறவும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு, போலியோவால் பாதிக்கப்பட்ட என் நண்பனையும் பின்னால் அமரவைத்து, தொகுதியின் துவக்கப் பகுதியைக் கடந்து சற்று முன் சென்று ப்ளூஸ்டார் என வழங்கும் பகுதியை வந்தடைந்தோம்.

   இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் பி.எல். இராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் சோ.மா. இராமச்சந்திரனும் போட்டியிட்டனர். 
  எங்களுக்கு ஒரே பிரமிப்பு; சாலையெங்கும் அலங்கார வளைவுகளும், கொடிகளும் தோரணங்களும், தொண்டர்களின் இடைவிடாத, வாக்களிக்க  வேண்டிய  வாக்காளர்களைத் திரட்டுதலும் என அட்டகாசப் படுத்திக் கொண்டிருந்தனர் அனைவரும் அதிமுகவினர்; அமைச்சர்களும் அடங்குவர். அருகில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியின் ச.ம.உ. JCD பிரபாகரன்தான் உள்ளூர் முக்கியப் பிரமுகர்.

    எதையோ பறிகொடுத்தபடியான எண்ணத்துடன் நாங்கள் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி அருகே சென்றோம். அங்கே அதன் எதிரே உள்ள கல்யாண மண்டபங்களெல்லாம் அதிமுக மந்திரிகளின் கைவசத்தில்; அங்கிருந்துதான் உணவு மற்றும் கொடிகள், வாக்கு விவரத்தாள்கள் (door slip) என அனைத்தும் உள்ளே வருவதும் போவதுமாக! ஆச்சரியம்தான்! இவ்வளவுக்கும் எந்தவிதமான ஆர்பாட்டங்களும் இல்லாமல் திமுகவின் பணிகள் நடந்தவண்ணம்தான் இருந்தது.

   இந்த அத்துமீறல்களையும் மீறி நாம் எப்படி வெல்லப் போகிறோம்? நண்பன் புலம்பத் தொடங்கிவிட்டான்; அவனை சமாதானப்படுத்த, மிதிவண்டியை அமைந்தகரை நோக்கி செலுத்தினேன்! ஒரு இடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தினோம்; பிறகு அங்கிருந்து, சில வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்த செயின்ட்.ஜார்ஜ் பள்ளியின் முகப்புக்கு வந்தோம் (பச்சயப்பன் கல்லூரி எதிரில்).  பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த அந்தப் பள்ளியின் முக்கிய வழியின் இரு பக்கமும் உள்ள நடைபாதையில், சற்றுத் தள்ளி, ஒருபுறம் திமுகவின் அலுவலகமும் மற்றொரு புறம் அதிமுகவின் அலுவலகமும் கீற்றுக் கொட்டகைகளில் அமைந்திருந்தன. நாங்கள் திமுக கொட்டகையை ஒட்டி, அவர்களின் செயலை கவனித்தபடி இருந்தோம்.

     உள்ளூர் தலைவர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் என்ன ஓட்டு போட்டுவிட்டீர்களா என்று கேட்டார். நாங்கள் திருமங்கலத்திலிருந்து வந்துள்ளோம்; நம் கட்சியின் வெற்றி நிலவரத்தை புரிந்துகொள்ள, என்று சொன்னோம். உடனே அவர் நம்ம ஆளுங்கதானே தம்பிகளா ஆளுக்கு ஒரு வோட்டு போடுங்க; யாரும் கண்டுபிடிக்காத மாதிரியான வாக்கினை தேர்ந்து தருகிறோம் எனச் சொல்ல, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! இதற்கிடையே வாக்குப் பதிவு நடந்தபடியே இருந்தது; புதிய பகுதி என்பதால் நாங்களும் தயங்கிக் கொண்டிருந்தோம் கள்ள வாக்களிக்க!
  
    இந்நிலையில் எங்களின் திமுக அலுவலகம் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது திமுக கொடியுடன். அதிலிருந்து இருவர் இறங்கி, சின்னம் பொறித்த வாக்கு விவரத் தாள்களைக் கட்டுக்கட்டாக எடுத்து, அந்த அலுவலகத்தில் கொடுத்து, கண்டிப்பாக இந்தத் தாளில்தான் (door slip) வாக்களிக்க வருகின்ற வாக்காளர்களுக்கு வாக்கு விவரங்களை எழுதித் தந்து உள்ளே சென்று வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்; அதன் பிறகு நிறைய பேர் வந்து சீட்டினைப் பெற்று வாக்களித்துச் சென்றனர். என் நண்பனிடம் நான் சொன்னேன்; கவலைப்படாதே நாம்தான் இந்தத் தேர்தலில் வெல்வோம் என்று. "எப்படி' என்றான். "அந்த டோர்சிலிப்பில் இருப்பது வாக்காளர்கள் விவரம் மற்றும் சின்னம் என்று தானே நாம் நினைத்தோம்; அது சின்னம் அல்ல; இப்போதைக்கு நம்மவர்கள் கண்டுபிடித்த புது டெக்னிக். அதாவது, உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாக, எம்ஜியார் ஒரு குழந்தைக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற படம் அச்சிடப்பட்டிருக்கிறது; இந்த சீட்டைக் கையில் எடுத்து வருவது நமது அதிமுகவினர்தான் அது கள்ள வாக்காக இருந்தாலும் நாம் விட்டுவிடுவோம் என்று உள்ளே இருக்கும் அதிமுகவினர் கருதுவார்கள்; தேர்தல் முடிய இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; முடிந்தவரை குத்திவிடுவோம் என நம் ஆட்கள் செயல்படத்  துவங்கிவிட்டனர்; எனவே வெற்றி நமக்குத்தான்" என்றேன். அதேபோல் வந்த ஆட்டோவும் அடுத்தடுத்த திமுக தேர்தல் பணிமனைகளுக்குச் சென்று தன் பணியைச் செவ்வனே தொடர்ந்தது. அதிமுக, மது மற்றும் பிரியாணி மயக்கத்தில் இருந்தது.

  தேர்தல் முடிவு வெளியானது. திமுகழகத்தின் அன்றைய புதிய சென்னை மாவட்டச் செயலாளரான டி.ஆர்.பாலுவின் உழைப்பு வீணாகவில்லை; திமுக வென்றது அண்ணாநகரில்.1977-ல் அனுபவமற்ற அதிமுகவிடம் இதே தொகுதியில் கலைஞரவர்கள் வெற்றியா தோல்வியா எனக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவில் சுமார் 600 வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை சோ.மா. ராமச்சந்திரன் சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனக்கும் என் நண்பனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

   திமுகவின் தொண்டனாக இருந்தபோதிலும் நான் அப்போதே பல கட்சிகளின் செயல்களையும் அதன் முக்கியஸ்தர்களின் பேச்சினையும் விரும்பிக் கேட்பேன்; பத்திரிகைகளையும். அந்த வழியில் துக்ளக் படிப்பது வழக்கம்; அந்த வார துக்ளக்கில் அண்ணாநகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஒரு பெட்டிச் செய்தியொன்று வந்திருந்தது; அதில், 'அத்தொகுதியில் திமுக வென்றது, கள்ள வாக்குகளினால்தான்; சென்னை மாவட்ட செயலாளர் பார்வையில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேலாக கள்ளவாக்குகள் பதிவிடப்பட்டிருந்தது' என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், ஒரு வக்கீல் நோட்டீஸ் டி.ஆர்.பாலுவின் சார்பில் அனுப்பப்பட்டு, அந்த இதழிலேயே பிரசுரமும் செய்யப்பட்டிருந்தது. அதில், அம்மாதிரியான மோசடிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், மான நஷ்டவழக்கு போடப்போவதாகவும் அது தெரிவித்தது. பதிலாக, துக்ளக் பத்திரிகையும் அந்த வழக்கைச் சந்திக்கவும், எங்களது செய்தி தவறானதல்ல என்று நிரூபிக்கப் போவதாகவும் சொன்னது. அதன் பிறகு, யாரும் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை! 

இப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளத் தயார்.



* (வெறிகொண்டது அந்தக் காலகட்டத்தில்; எந்தக் கட்சியின் மீதும் இப்போது வெறி இல்லை; அதனால் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமே உண்டு மனதில்).
                                                                                படங்கள் உதவி: Google Image