சனி, 20 ஏப்ரல், 2019


அடித்தள
 மக்கள் வரலாறு:
 

                          ஆ
.சிவசுப்பிரமணியன்
.

வெள்ளையர்
ஆட்சியில் காரன்வாலிஸ் காலத்தில் 1786-ல் கொண்டுவரப்பட்ட நிலவரி முறை, கிழக்கிந்திய கம்பெனிக்கு நல்ல வருவாய் ஈட்டித் தந்தது; எனினும், விளைச்சலற்ற காலங்களில் வரி செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர்; எனவே, இம்முறையைக் கைவிட்டு, இரயத்வாரி எனும் புதிய நிலவரியை அறிமுகப்படுத்தினார் தாமஸ் மன்ரோ.
இந்த இரயத்வாரி முறையில் கர்ணம் அல்லது கணக்குப்பிள்ளை எனும் பதவியில் உள்ளவர்களின் கொள்ளைகளைப் பற்றி தாமஸ் மன்ரோவே நிலவருவாய் கழகத்திற்கு கடிதம் எழுதுகிறார் கீழ்க்கண்டவாறு: (அவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக 1823 - 1826 வரை இருந்தபோது):
"
கிராம முன்சீப்களும், நாட்டாண்மைக்காரர்களும், மிராசுதாரர்களும், கர்ணங்களும் மிக நல்ல நிலங்களை எல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால் தரம் குறைந்த நிலங்களுக்கு உரிமையாளராக இருக்கும் உழவர்களிடம் அதிகமான வரி வசூலித்து அவர்களைத் துன்புறுத்துகின்றனர்"(ராமசாமி 1990: 756,757).
"
கர்ணம் சர்க்காருக்கும் குடியானவர்களுக்கும் பொதுவான அதிகாரி; பொதுவாக இரு தரப்பையும் ஏமாற்ற முயல்வார்" என்கிறார் அன்றைய வேறொரு ஆட்சியர்(நீல்மணி முகர்ஜி 1962: 234).
                          

நூலிலிருந்து சிலதுளிகள்: 2.

அன்றைய திருவாங்கூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் இருந்தபோது, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக இருந்த தோள்சீலைப் போராட்டத்தினைப் பற்றி ஒரு நொடிக்கதை ஒன்று உலவி வந்ததைப் பார்ப்போம்:
இன்றைய குமரி மாவட்டத்தின் மேற்கே உள்ள விளவங்கோடு பகுதியைச் சுற்றிப் பார்க்க மூலம் திருநாள் மன்னர் வந்தார். மன்னரின் வருகைக்கு முன்னேற்பாடு செய்ய அப்பகுதிக்கு வந்த பேஷ்கார், நன்றாகக் குளித்து சுத்தமாக ஆடை அணிந்து மன்னரை வரவேற்கும்படிக் கூறிச் சென்றார். குறித்த நாளில் மன்னரும் அங்கு வந்தார். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மன்னரை வரவேற்கக் கூட்டமாக நின்றனர். அப்பெண்கள், கூட்டத்தை மன்னர் கடக்கும்போது இடுப்பு ஆடையைத் தூக்கிப் பெண் உறுப்பைக் காட்டினார்கள்.
மன்னர் அக்காட்சியைப் பார்த்தாலும் ஒன்றும் கூறாது அமைதியாகச் சென்றுவிட்டார். கோபமாக வந்த பேஷ்கார் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டீர்களே என்று சத்தமிட, அம்மக்களும் பதட்டமின்றி, இதுவரை வெள்ளாளர்களுக்கும், நாயர்களுக்கும் திறந்த மார்பைக் காட்டி வந்தோம். அவர்களைவிட மேலான மகாராஜா வரும்போது அவர்களுக்குக் காட்டாத ஒன்றைக் காட்டுவதுதானே மரியாதை; அதனால்தான் மரியாதைக்காக இப்படிச் செய்தோம் என்று கூறினார்கள். பேஷ்கார் பதில் எதுவும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார் (.கா.பெருமாள்: 6-6-99).”
என்னுரை: இதுதான் ராஜமரியாதை என்பதோ….! என்றாலும் இது கதையில்தான். இது நொடிக்கதை என அழைக்கப்படுகிறது.

திங்கள், 15 ஏப்ரல், 2019

விந்தை மனிதர்கள்!

ஒருமுறை செங்கல்வராயப் பிள்ளை என்பவர், திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய நூல்களைத் திரட்டி புதிய நூலாக வெளியிட்டு அதை உ.வே.சா அவர்களிடம் தந்தார். அதைப் படித்தறிந்த உ.வெ.சா. திடீரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டார், பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை, என்ன காரியம் செய்தீர்கள்? என்றார்.
உ.வெ.சா., தமிழின் பெருமைகளை ஆராய்ந்த புனிதக் கரங்களாயிற்றே அதனால்தான் அந்தக் கைகளை ஒற்றிக்கொண்டேன் என்றார்.
நெகிழ்ந்துபோன செங்கல்வராயப்பிள்ளை விடைபெற்றுக்கொண்டு நாலடி நடந்தவர், திரும்பவும் உ.வெ.சாவிடம் வந்தார். எதிர்பாராத விதமாக அவரது காலில் விழுந்து பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
இம்முறை பதறியவர் உ.வெ.சா. பிள்ளை என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள் என்றார். சங்க இலக்கியங்களை பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடியலந்த திருப்பாதங்களாயிற்றே என்று கண்ணீர் மல்கக் கூறினார் பிள்ளை. எத்தனைப் பெருமை மிக்கவர் உ.வெ.சா.

--- 'வரலாற்றில் அரிய நிகழ்வுகள்' எனும் நூலிலிருந்து.


வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்


நார்ட்டன் எனும் புகழ்பெற்ற ஆங்கில வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தார். 'சான் வாலீஸ்' என்ற நீதிபதியும் இன்னொரு இளைய நீதிபதியும் அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "நார்ட்டன்" புத்தகங்களைப் புரட்டி அவைகளிலிருந்து நீண்ட பகுதிகளைப் படித்துக் காட்டியவாறு இருந்தார். "நார்ட்டன்" தனது குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் இடத்திற்குத் தகுந்தாற்போல் படித்ததால், நீதிபதி 'சான் வாலீசின்' காதில் தாலாட்டு மாதிரி பட்டது போலும். 'சான் வாலீசின்' கண்கள் மூடின. தலை நெஞ்சில் புதைந்தது. அது போலவே நீதிபதி 'சான் வாலீசின்' டபேதாரையும் தூக்கம் ஆட்டவே, அவனும் தூங்க ஆரம்பித்தான். இதைக் கவனித்த "நார்ட்டனுக்கு" சிறிது ஆத்திரம் வந்தது. அவர் தன் முன்னால் இருந்த புத்தகக் கட்டைத் தள்ளினார். அது தரையில் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. டபேதார் தூக்கத்திலிருந்து தடால் என எழுந்தான். நீதிபதி 'சான் வாலீசும்' திடீரென்று கண்விழித்தார்.
"நார்ட்டன்" 'மாண்புமிகு நீதிபதியே நான் வருந்துகிறேன் எனக் கூறினார்.
"ஏன் என்ன விஷயம் நார்ட்டன்?"
" ஓ, ஒன்றுமில்லை. அய்யா, டபேதார் தானும் ஒரு நீதிபதியைப்போல் நீதிமன்றத்தில் தூங்கமுடியும் என்று கருதுகின்றான்" என்று அமைதியாகப் பதிலளித்தார் "நார்ட்டன்"
---"வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்" அய்யா.பொ.வேல்சாமி  அவர்கள் 

முகநூலில்
 அடையாள காட்டிய மிகச் சிறந்த, சட்டத்துறை வரலாறும், சுவையான நிகழ்ச்சிகளும் நிறைந்த நல்ல நூல்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நான் அறிந்த வகையில்:



தமிழருவி மணியன்:

 
 பள்ளியை விரும்பாமல் வேலைக்கும் செல்லாமல் சோம்பித்திரிந்த காலமது. 1980. அரசியல் பற்றிய ஆர்வம் வளரத் துவங்கிய நேரமது. ஆர்வத்துடன் சிற்றிதழ்கள் முதல் நாவல்கள் போன்றவை எல்லாம் வாசிக்கத் துவங்கிய தருணமது.

    வீட்டின் அருகே,
 பொதுக்கூட்டம் எனச் சொல்லி நடைபெறும் கட்சிக் கூட்டங்களை விரும்பிக் கேட்பதுண்டு; பெரும்பாலும் திமுகவின் கூட்டம்தான். இரட்டை வசனங்கள் அதிகம் எனினும், சரியான விமர்சனங்கள் பொங்கிவரும்.
  அதிமுக கூட்டத்தில் சுவை இருக்காது; கருத்து இருக்காது; கலைநிகழ்ச்சி எனும் பேரில் திரைமெட்டில் தாங்கள் தழுவிய பாடல்களைப் பாடுவார்கள்; கருணாநிதியை அர்ச்சிப்பது - எம்ஜியாரைப் புகழ்வது (துதிப்பது அல்ல;அது ஜெயா காலத்தில் வந்தது) என்பதே அதிமுகவின் பொதுக்கூட்டம்; விதிவிலக்காக அப்போதெல்லாம் குத்தாட்டம் கலப்பதில்லை!

  திடீரென ஒருநாள் காலை பாரதி மேடை அமைப்பு எனும் கம்பெனியின் மேடையானது முச்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும்; மாலையில் மேடையை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே தெரிந்துவிடும் எந்தக்
கட்சியின் கூட்டம் என்று. மேடை முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர்த் தலைவர்கள் அமர்ந்திருக்க கீழே பார்வையாளர்கள் யாருமே இல்லை என்றால் அது இந்திரா காங்கிரசின் பொதுக்கூட்டம்! ஆம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்பதுபோல எல்லோருமே இக்கட்சியில் தலைவர்கள்தாம்! தொண்டர்களோ யாரும் இல்லை?



  மேற்கண்ட அமைப்புடன் ஒருநாள் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது; நான் வழக்கம்போல் காங்கிரசின் கூட்டம் எனக் கருதி வீட்டுக்குச் சென்று முகம் கழுவிவிட்டுப் பின்பு வரலாம் என வீடு நோக்கி நகர்ந்தேன்; ஆனால், என் காதுகள் கூட்டத்தில் உரையாற்றும் பேச்சாளரின் வீச்சின் பக்கமிருந்து விலக மறுத்தது. அரசியல் கூட்டம்தான் என்றாலும் அந்த உரையானது, நிதானமாக, தடையின்றி, எளியவருக்கும் புரியும் வண்ணம் அரசியலோடு  இலக்கியத்தையும் கலந்து செவியினைக் குளிர வைத்தது! அவரது பேச்சின் துவக்கத்தில் பார்வையாளராக நான் சென்ற நேரத்தில் ஒரு இருபது முதல் முப்பது பேர்கள் வரைதான் இருந்தனர்; யாரும் அசையாமல் கட்டிப்போட்ட அந்த உரைவீச்சு முடியும்போது, சுமார் இருநூறு பேர்களுக்கும்மேல் அங்கிருந்து கலைந்து சென்றனர்; அப்போது வளர்முகத்தில் இருந்த அவரது பல கூட்டங்களிலும் இதுவே வாடிக்கையானது; இவ்வாறு எனக்கு அறியவந்தவர்தான் தமிழருவி மணியன்; அன்றைய ஜனதாக் கட்சியின் பேச்சாளராக!
                                                                               தொடர்வேன்......

வியாழன், 22 ஜூன், 2017

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.


படித்ததில் பிடித்தது...

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.

எழுதியவர்: முபாரக் அலி. பாகிஸ்தானின் வரலாற்று பேராசிரியர்!

தமிழில்: மொழிபெயர்ப்பு: நா.தருமராஜன்.

வெளியீடு: என்.சி.பி.எச்.

     வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக்கருத்து --- இது பதிப்புரை.

     முனைவர் முபாரக் அலி தொழில்முறை வரலாற்றாசிரியர்களிடமிருந்து தனித்து, மசூதிகள், மற்றும் அரசவைகளில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தானின் வரலாற்றை சாதாரண மக்களை நோக்கித் திருப்பினார். தெளிவான நடையில் வரலாற்று நூல்களை எழுதினார் -- மாணவர்களும் அரசியல்வாதிகளும் விரும்பும் வண்ணம்! அதிகாரபூர்வ வரலாறுகளில் உள்ள தவறுகளையும் பிரச்சாரத்தையும் வன்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டால் வரலாறு தன்னுடைய படைப்புத் திறனை இழந்துவிடுகிறது என்றும் மக்களுடைய சிந்தனா சக்தியை தூண்டுவதற்குப் பதிலாக அதை உறைய வைக்கிறது என்றும் சொல்கிறார்.
--- இது: முனைவர் ஸையது ஜாபர் அஹமது
கராச்சி பல்கலைக்கழகம், கராச்சி.

    இந்த புத்தகத்தின் வெறும் 140 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக,தெளிவான நடையில் தமது நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் இருக்கின்ற நிலையினை எடுத்துக் கூறுகிறார் முபாரக் அலி. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு வந்த அரசின் தலைவர்களும் அதன்பின் அடுத்தடுத்து வந்த அரசுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் சிறு சரிவுகளுக்குக்கூட மதத்தையும் மதத் தலைவர்களின் தொடர்புகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிகாரத்தைத் தங்கள் கையிலிருந்து செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்நாட்டின் மதம்தான் முக்கியம்; அதனால் மதவழி மீறாமல் அதன்வழியே ஆட்சி நடத்துவது போன்ற பாவனையை ஏற்படுத்தி மதத்தலைவர்களை திருப்தி செய்து, அவர்களை வைத்தே எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தி அரசியல்வாதிகள் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; அதே நேரத்தில் மதவாதிகளும் மதத்தையும் மக்களையும் காட்டிக்காட்டி அரசியல்வாதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

   மேற்கண்ட நிலை தொடர்ந்தபோது அரசியல்வாதிகளின் தகுதிகள் குறையத் துவங்கி மதவாதிகளின் கை ஓங்கி மதத்தின் பல வலுப்பெற்ற உட்பிரிவுகள் தாங்களே பல மதவாதக் கட்சிகளைத் துவக்கிக்கொண்டன; மக்களின் மத உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியதிகாரம் பெற மதம் விரும்புகிறது; அரசியலும் மதமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன.

   இஸ்லாமிய மத போதனைகளில் எந்த புதிய விளக்கங்களும் புதிய மாற்றங்களும் ஏற்க்கப்படக்கூடாது என்பதில் பாகிஸ்தானிய மதவாதிகள் மிகத் தெளிவாக உள்ளார்கள்; அதிலும் இந்திய இஸ்லாமிய அறிஞர்களின் எந்த புதிய விளக்கங்களும் தவறிக்கூட தங்கள் நாட்டில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

   மேலும், இந்நூலில் பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசும் எவ்வாறெல்லாம் மதத்தைப் பயன்படுத்தின என்றும், ஒவ்வொரு சர்வாதிகாரியும் எப்படி மதத்தைப் பயன்படுத்தினர் என்றும், அந்நாட்டிற்கான வரலாற்றை அமெரிக்கர்களை வைத்து எழுதியதையும், இந்தியா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை மாற்றி எழுதுவதையும் தமது பாகிஸ்தானின் வரலாற்றைத் தங்களவர்களே தவறாகத் திரிப்பதையும் எழுதி மனம் புழுங்குகிறார் அதன் ஆசிரியர் முனைவர்.முபாரக் அலி!

   மதத்தைக் கைக்கொண்ட எந்த ஒரு நாடும் இப்படித்தான் இருக்கும் என்றும், நமது நாட்டில்கூட ஒரு சில வேற்று மதவெறியர்களின் செயல்களுக்காக மாற்று மதவெறியின் ஆட்சி தேவையா என்று அச்சம் ஏற்படுவது இயல்புதானே! நன்றி!

   இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

படித்ததில் ஒன்று

    திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல.

  கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்குஉயிரான காதலர்கள்.தங்கள் வீடுகளில்மணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக்கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

   என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

    இது விமர்சனம் அல்ல.மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே!ஒரு சிறு குமிழிதான்!

நன்றி!

வெள்ளி, 16 ஜூன், 2017

நாங்க அப்பவே அப்படித்தான்!

    1984. எம்ஜியாரின் ஆட்சிக்காலம். நான்கு சட்டமன்ற இடத்துக்கான இடைத் தேர்தல். திமுக தலைவர் கருணாநிதியின் விலகலால் அண்ணாநகர், திமுக
உறுப்பினர் மாயவரம் கிட்டப்பா மறைவின் பொருட்டு, மாயவரம் இன்றைய மயிலாடுதுறை,   மற்றொரு திமுக உறுப்பினர் N.நடராஜன் மறைவின் காரணமாக தஞ்சாவூர், மற்றொரு உறுப்பினரின் விலகல் காரணமாய் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டது.
   

    தேர்தல் முடிவு இரு கட்சிகளுக்கும் இணையாக அமைந்தது. அண்ணாநகர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளைத் திமுகவும், தஞ்சை மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளை அதிமுகவும் என்ற வகையில் தாங்கள் வென்ற தொகுதிகளைத் தக்க வைத்துக்கொண்டன.


   இதில் சென்னைவாசியான, திமுக வெறிகொண்ட* இளைஞனான நான் உள்வாங்கிய அண்ணாநகர் தொகுதியின் சில சம்பவங்களைப் பதிவிடவே இப்போதைய எண்ணம்.

   அண்ணாநகர் தொகுதியானது மேற்குப் பக்கம், உள்ள 11வது மெயின் ரோடு எனும் அப்போதைய பேருந்து நிறுத்துமிடத்தோடு முடிந்துவிடும். அதற்கடுத்து திருமங்கலம் பகுதி தொடங்கிவிடும். நானும் எனது நண்பனும் அப்போது அந்தப் பகுதியில்தான் இருந்து வந்தோம். நாங்கள் இருவருமே திமுகவினர் என்பதால் பக்கத்துத் தொகுதியில் இடைத் தேர்தல் எப்படித்தான் நடைபெறுகிறது என்பதையும் இயக்கத்துக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மனச்சாந்தி பெறவும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு, போலியோவால் பாதிக்கப்பட்ட என் நண்பனையும் பின்னால் அமரவைத்து, தொகுதியின் துவக்கப் பகுதியைக் கடந்து சற்று முன் சென்று ப்ளூஸ்டார் என வழங்கும் பகுதியை வந்தடைந்தோம்.

   இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் பி.எல். இராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் சோ.மா. இராமச்சந்திரனும் போட்டியிட்டனர். 
  எங்களுக்கு ஒரே பிரமிப்பு; சாலையெங்கும் அலங்கார வளைவுகளும், கொடிகளும் தோரணங்களும், தொண்டர்களின் இடைவிடாத, வாக்களிக்க  வேண்டிய  வாக்காளர்களைத் திரட்டுதலும் என அட்டகாசப் படுத்திக் கொண்டிருந்தனர் அனைவரும் அதிமுகவினர்; அமைச்சர்களும் அடங்குவர். அருகில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியின் ச.ம.உ. JCD பிரபாகரன்தான் உள்ளூர் முக்கியப் பிரமுகர்.

    எதையோ பறிகொடுத்தபடியான எண்ணத்துடன் நாங்கள் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி அருகே சென்றோம். அங்கே அதன் எதிரே உள்ள கல்யாண மண்டபங்களெல்லாம் அதிமுக மந்திரிகளின் கைவசத்தில்; அங்கிருந்துதான் உணவு மற்றும் கொடிகள், வாக்கு விவரத்தாள்கள் (door slip) என அனைத்தும் உள்ளே வருவதும் போவதுமாக! ஆச்சரியம்தான்! இவ்வளவுக்கும் எந்தவிதமான ஆர்பாட்டங்களும் இல்லாமல் திமுகவின் பணிகள் நடந்தவண்ணம்தான் இருந்தது.

   இந்த அத்துமீறல்களையும் மீறி நாம் எப்படி வெல்லப் போகிறோம்? நண்பன் புலம்பத் தொடங்கிவிட்டான்; அவனை சமாதானப்படுத்த, மிதிவண்டியை அமைந்தகரை நோக்கி செலுத்தினேன்! ஒரு இடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தினோம்; பிறகு அங்கிருந்து, சில வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்த செயின்ட்.ஜார்ஜ் பள்ளியின் முகப்புக்கு வந்தோம் (பச்சயப்பன் கல்லூரி எதிரில்).  பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த அந்தப் பள்ளியின் முக்கிய வழியின் இரு பக்கமும் உள்ள நடைபாதையில், சற்றுத் தள்ளி, ஒருபுறம் திமுகவின் அலுவலகமும் மற்றொரு புறம் அதிமுகவின் அலுவலகமும் கீற்றுக் கொட்டகைகளில் அமைந்திருந்தன. நாங்கள் திமுக கொட்டகையை ஒட்டி, அவர்களின் செயலை கவனித்தபடி இருந்தோம்.

     உள்ளூர் தலைவர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் என்ன ஓட்டு போட்டுவிட்டீர்களா என்று கேட்டார். நாங்கள் திருமங்கலத்திலிருந்து வந்துள்ளோம்; நம் கட்சியின் வெற்றி நிலவரத்தை புரிந்துகொள்ள, என்று சொன்னோம். உடனே அவர் நம்ம ஆளுங்கதானே தம்பிகளா ஆளுக்கு ஒரு வோட்டு போடுங்க; யாரும் கண்டுபிடிக்காத மாதிரியான வாக்கினை தேர்ந்து தருகிறோம் எனச் சொல்ல, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! இதற்கிடையே வாக்குப் பதிவு நடந்தபடியே இருந்தது; புதிய பகுதி என்பதால் நாங்களும் தயங்கிக் கொண்டிருந்தோம் கள்ள வாக்களிக்க!
  
    இந்நிலையில் எங்களின் திமுக அலுவலகம் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது திமுக கொடியுடன். அதிலிருந்து இருவர் இறங்கி, சின்னம் பொறித்த வாக்கு விவரத் தாள்களைக் கட்டுக்கட்டாக எடுத்து, அந்த அலுவலகத்தில் கொடுத்து, கண்டிப்பாக இந்தத் தாளில்தான் (door slip) வாக்களிக்க வருகின்ற வாக்காளர்களுக்கு வாக்கு விவரங்களை எழுதித் தந்து உள்ளே சென்று வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்; அதன் பிறகு நிறைய பேர் வந்து சீட்டினைப் பெற்று வாக்களித்துச் சென்றனர். என் நண்பனிடம் நான் சொன்னேன்; கவலைப்படாதே நாம்தான் இந்தத் தேர்தலில் வெல்வோம் என்று. "எப்படி' என்றான். "அந்த டோர்சிலிப்பில் இருப்பது வாக்காளர்கள் விவரம் மற்றும் சின்னம் என்று தானே நாம் நினைத்தோம்; அது சின்னம் அல்ல; இப்போதைக்கு நம்மவர்கள் கண்டுபிடித்த புது டெக்னிக். அதாவது, உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாக, எம்ஜியார் ஒரு குழந்தைக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற படம் அச்சிடப்பட்டிருக்கிறது; இந்த சீட்டைக் கையில் எடுத்து வருவது நமது அதிமுகவினர்தான் அது கள்ள வாக்காக இருந்தாலும் நாம் விட்டுவிடுவோம் என்று உள்ளே இருக்கும் அதிமுகவினர் கருதுவார்கள்; தேர்தல் முடிய இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; முடிந்தவரை குத்திவிடுவோம் என நம் ஆட்கள் செயல்படத்  துவங்கிவிட்டனர்; எனவே வெற்றி நமக்குத்தான்" என்றேன். அதேபோல் வந்த ஆட்டோவும் அடுத்தடுத்த திமுக தேர்தல் பணிமனைகளுக்குச் சென்று தன் பணியைச் செவ்வனே தொடர்ந்தது. அதிமுக, மது மற்றும் பிரியாணி மயக்கத்தில் இருந்தது.

  தேர்தல் முடிவு வெளியானது. திமுகழகத்தின் அன்றைய புதிய சென்னை மாவட்டச் செயலாளரான டி.ஆர்.பாலுவின் உழைப்பு வீணாகவில்லை; திமுக வென்றது அண்ணாநகரில்.1977-ல் அனுபவமற்ற அதிமுகவிடம் இதே தொகுதியில் கலைஞரவர்கள் வெற்றியா தோல்வியா எனக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவில் சுமார் 600 வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை சோ.மா. ராமச்சந்திரன் சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனக்கும் என் நண்பனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

   திமுகவின் தொண்டனாக இருந்தபோதிலும் நான் அப்போதே பல கட்சிகளின் செயல்களையும் அதன் முக்கியஸ்தர்களின் பேச்சினையும் விரும்பிக் கேட்பேன்; பத்திரிகைகளையும். அந்த வழியில் துக்ளக் படிப்பது வழக்கம்; அந்த வார துக்ளக்கில் அண்ணாநகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஒரு பெட்டிச் செய்தியொன்று வந்திருந்தது; அதில், 'அத்தொகுதியில் திமுக வென்றது, கள்ள வாக்குகளினால்தான்; சென்னை மாவட்ட செயலாளர் பார்வையில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேலாக கள்ளவாக்குகள் பதிவிடப்பட்டிருந்தது' என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், ஒரு வக்கீல் நோட்டீஸ் டி.ஆர்.பாலுவின் சார்பில் அனுப்பப்பட்டு, அந்த இதழிலேயே பிரசுரமும் செய்யப்பட்டிருந்தது. அதில், அம்மாதிரியான மோசடிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், மான நஷ்டவழக்கு போடப்போவதாகவும் அது தெரிவித்தது. பதிலாக, துக்ளக் பத்திரிகையும் அந்த வழக்கைச் சந்திக்கவும், எங்களது செய்தி தவறானதல்ல என்று நிரூபிக்கப் போவதாகவும் சொன்னது. அதன் பிறகு, யாரும் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை! 

இப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளத் தயார்.



* (வெறிகொண்டது அந்தக் காலகட்டத்தில்; எந்தக் கட்சியின் மீதும் இப்போது வெறி இல்லை; அதனால் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமே உண்டு மனதில்).
                                                                                படங்கள் உதவி: Google Image 

ஞாயிறு, 12 மார்ச், 2017

என் விருப்பக் கவிதைகள்




தரிசனம்

நாம் ரசிக்கவிரும்பிய மலர்
தோட்டத்து வேலியில் பூத்துக்கிடந்தது
நாமோ சந்தைக்கு போனோம்
நாம் கேட்க விரும்பிய இசை
சமையலறையிலிருந்து மிதந்தது
நாமோ மியூசிக் அகடமியிலமர்ந்து
தொடையில் தாளம் போட்டோம்
நமது பசிக்கான வாழைப் பழங்களை சாலையோரம்
மூதாட்டி விற்றுக் கொண்டிருந்தாள்
நாமோ சாப்பிடுபவர் கூச்சமுற
சரவணபவனில் கால்கடுக்க நின்றோம்
நாம் தொழ விரும்பிய தெய்வம்
நமது வலது பக்கத்தில் நின்றது
நாமோ காலமெல்லாம் 
இடதுபக்கமாக நடந்து 
இடுகாடடைந்தோம்!

                                         
                      -கரிகாலன்



         *************************************************************

அம்மன்


ரோரம் தாமரைக்குளம்
குளம்பூத்த சிவந்த மலரழகா
அதன் கரை வீற்ற
அம்மன் விழி அழகா
என அழகூறித் ததும்பும் ஊர் எமது
அவளது ஆலயத்தில் 
சூரியன் பட்டுச் சிதறும் கலசமில்லை
வேலைப்பாடுகூடிய கொடி மரமில்லை
வாசனைபோல் ஒலி பரவ
ஒரு வெண்கல மணியுமில்லை
நாட்டோடுகள் வேயப்பட்டு
பூச்சற்ற செங்கல் சுவர்சூழ
சாதாரண மரப்பலகையில்
அமர்ந்திருந்த அன்னை
எங்களைப்போலவே ஏழை மகள்
அம்மா திரௌபதியே
ஐவரைத்தாங்கிய அழியாத பத்தினியே
என விளித்து
எம்பெண்டிர் புலம்பலைக் 
கேட்டுக் கல்லானவள்
நிலையான தல விருட்சமில்லை
மருங்கூர் மாற மாற 
ஆல் போனது அரசு போனது 
இன்று வேம்பிருக்கிறது
சுந்தரரும் அப்பரும் 
மாணிக்கவாசகரும் 
 
பாடாவிட்டாலென்ன
குளிர்ந்த நீரில் விரால்போல நீந்தி
தலை துவட்டாத ஈரத்தோடு
அம்மன் தாம்பூலத்தில் மணந்த
வராட்டிச் சாம்பலை நெற்றியிலிட்ட
பிள்ளையொன்று அதன் 
தாய்க்குப் பாடும் தாலாட்டிது
எமது வாழ்வின் 
சுப காரியங்களிலும் 
துக்கத்திலும் 
துணையிருந்த தெய்வமவள்
முடிவெடுக்கத் திகைத்து 
தம் சிற்றறிவை நம்பாது 
வேப்பிலைகளை உருவிப்போட்டார்கள்
ஒற்றை கிடைத்தால் 
அன்னையின் திருவுளமென 
மகிழ்ந்து ஏற்றார்கள்
ஒரே ஒரு கற்பூரத்தில் விழிப்பூ சிந்தி 
வலியிறக்கி வைத்தோரின் 
வாதை போக்கிய ஏழை மருத்துவச்சி
நாற்றங்கால் பருவங்களில் 
அம்மா தாயே 
மண்ணை பொன்னாக்கு
என விதையள்ளித் தூவினோம்
மனம்நிறைய மனை நிறைய 
விளைந்த புது நெல்லில் 
அவளுக்கு பொங்கல் வைத்து உண்டோம்
ஆடிமாதங்களில் அவளது 
தலத்தில் தீக்குழி விரிந்தது
திருவிழா 
கிராமத்தின் விழிகளில் 
மகிழ்ச்சியை மலர்த்தியது
கூத்து மேடைக்கு முன்னால் 
ஊரே கோரைப் பாயை 
கோணிச்சாக்கை விரித்து குந்தியது
முருகேசன் மாமா கடையில் 
காராச்சேவு வாங்கி 
ஐந்தாம் வகுப்பு படித்த கந்தசாமிகளை அஞ்சலைக்குத் தூதனுப்பினோம்
பெட்ரமாக்ஸ் ஒளியில் 
அஞ்சலையின் பழிப்பு காட்டிய முகம் சூலாயுதத்தை நெஞ்சிலிறக்கியது
பிள்ளைகளின் காதல் களியை 
ரசித்தவளே அன்னை
கீசக வதமும் அல்லி தர்பாரும்
முதியோர்களின் 
கற்பனையை வளர்த்தது
இளையோரின் காதலும் 
அவ்விருளில் சேர்ந்து வளர்ந்தது
அவள் தேடியெம் இல்லம் வர
தெருவெல்லாம் கோலமுறும்
மாவிளக்கில் தீபமேறும்
ஒரே மகன் நோயுதிர்ந்து 
கண்திறக்க வேண்டும்
எழுப்பும் இல்லம் 
இனிதுற வேண்டும்
பிள்ளைக் கலி தீர வேண்டும்
ஆறு வற்றாது நிறைய வேண்டும் 
மும்மாரி பொழியவேண்டும் 
ஊரைத் தீவினை 
சூழாதிருக்க வேண்டுமெனும் வேண்டுதல்களோடு
செந்தணலில் ஊரார் 
பூக்குழி கடந்தனர்
அவர்தம் பாதச்சூட்டில் 
அன்னை முகம் சிவந்தாள்
அவள் எந்த அற்புதங்களையும் நிகழ்த்தியவளில்லை
முடவர்களை நடக்க வைத்ததில்லை
குருடர்களைப் பார்க்க வைத்ததுமில்லை
கொள்ளி போட ஒரு மகனுண்ட
என்ற சிறிய சந்தோஷத்தையும் 
பொய்க்கவைத்து 
 
பாலிடாயில் குடித்து இறந்த 
மகன்களைத் தாங்கிய மண்ணிது
அப்போதெல்லாம் 
கண்மூடிக்கொண்டவளே 
எங்கள் அன்னை
ஐந்தாவது முறை போர்போட்டும் 
தண்ணீர் காணாது அழிந்த குடும்பத்தின் பிரார்த்தனைகளை செவியுறாத 
மக்கு தெய்வம்தான் 
எங்களன்னை
ஆனாலும் ஊரெல்லைக் கடந்து 
தேச எல்லைக்கடந்து 
தெய்வங்களைத் தேடாதது 
எங்கள் விவசாயக் குடி
மூக்கு நீண்டிருந்தாலும் 
பேசமுடியாத ஊமையாயிருந்தாலும் 
பல்வரிசை உதடு தாண்டியிருந்தாலும் 
மேனி கருத்திருந்தாலும் 
தம்பியை மகனை மகளை தந்தையை 
நேசிக்கத் தடைகொண்டோமில்லையே
அம்மன் எங்களுக்குத் 
தெய்வமில்லை
கேட்க நாதியற்ற ஏழையரின் 
கதைகேட்ட சகோதரி
நாங்கள் தோல்விகளில் கசந்தபோது 
திட்டக் கிடைத்த தோழி
அவள் எதுவுமே செய்யாதிருந்த போதும்எங்களது வெற்றிகளெல்லாம் 
அவளால் விளைந்ததென 
அவளின் கீர்த்திகளை 
திசைகளின் செவிகளில் சொன்னோம்
ங்கள் தாங்காது 
ஓடிவிடாமலிருக்கிறாளே
எங்களம்மன்
அவள் நினைவொன்றே 
வலிமையாயெண்ணி 
வாழ்வதெம் குலம்!
              -கரிகாலன்

*************************************************************


இடைவெளி


பாபர் மசூதியை இடிக்கக் கூப்பிட்டபோது
 கடப்பாறையை கையில் தந்து

இந்து என்றார்கள்

ஜென்யூவுக்கு படிக்க வந்தபோது
தூக்குக்கயிற்றை கழுத்தில் அணிவித்து
தலித் என்கிறார்கள்

இந்தியா ஒரே தேசம்
ஆனாலும் அதன் மனிதர்களுக்கோ
வெவ்வேறு மதிப்புகள்

இந்தியா ஒரே தேசம்
ஆனாலும் அதனிடம்
இரண்டு தேநீர் குவளைகள்

இந்தியா ஒரே தேசம்
ஆனாலுமதன் மனிதர்களை எரியூட்ட
இரண்டு சுடுகாடுகள்

இந்திய ஒரே தேசம்
ஆனாலும் இபிகோ மனுவென்று
அதற்கு இரண்டு சட்டங்கள்

சாதிப்படிக்கட்டில்
கீழே இருப்பவர்கள்
உயர்கல்வி நிறுவனங்களின்
படிக்கட்டுகளில் கால் வைக்கும்போது
அவை உயிர்க்கொல்லி
நிறுவனங்களாகி விடுகின்றன

படிக்கப்போன
ரோஹித் வெமுலா
முத்துகிருஷ்ணன்
காதலிக்கப்போன இளவரசன்
ஜெயிலுக்குப்போன ராம்குமார்
எல்லோரும் செத்துப்போனார்கள்

இந்தியாவின்
போலிஸ்காரர்கள்
மருத்துவர்கள்
நீதியரசர்கள் பேதமில்லாமல்
 தற்கொலைகளென்றார்கள்

காவி நாயகர்கள்
ஆயுதங்களால் கொல்கின்றனர்
தேவையெனில் நீதியாலும் கொல்கின்றனர்

இந்தியனென்பது இந்துவென்பது
தலித்தென்பது எப்போதுமே
 சமமாயிருந்ததில்லை

நுலிழையளவு
இடைவெளி கொண்டவர்களே
இந்தியர்கள்

ஆம்..
நூலிழையளவு!

             -கரிகாலன்.


********************************************************


சுசி தமிழ்

தெய்வத் தமிழ்செந்தமிழ்,
 

முத்தமிழ்கன்னித் தமிழ், 

தென்
 தமிழ்தேன் தமிழ், 

பழந்தமிழ்ஞானத் தமிழ், 


திருநெறிய தமிழ்அமுதத் தமிழ், 


அருந்தமிழ்தண்டமிழ், 


வண்டமிழ்ஒண்டமிழ் இசைத் தமிழ்,
தன்னேரிலாத
 தமிழ்இயற்றமிழ், 


தீந்தமிழ்இருந்தமிழ்நாடகத் தமிழ், 


பசுந்தமிழ்கொழிதமிழ்பாற்றமிழ், 


சொற்றமிழ்பைந்தமிழென


எத்தனை பரிமாணம் கொண்டது 


எந்தமிழ்


அடியே சுசி..


நீ என்னடாவென்றால்


கோ டு ஹெல்லென்கிறாய்


திட்டும் இனித்திடும்


தீந்தமிழில் திட்டுவாயா!







அவள்
 நைட்டி அணிவதில்லை.


ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று


சின்ன வயதில் ஓடியவள்


எட்டு வயதில்


முழங்காலுக்கு மேலான காயத்தை 


அப்பாவுக்குக் காட்ட மறுத்தவள்


உடை மாற்றும் அறைக்குள்


அம்மாவைக்கூட அனுமதியாதவள்


எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்


அருவிகளில் ஒருபோதும் குளிக்காதவள்


வெளிச்சத்தில் கணவனுடன் கூட சம்மதியாதவள்


மரித்தலுக்குப் பின் 


அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில் 


ஈக்களும் கண்களும் அங்கேயே மொய்க்க


இப்படியாகுமெனில்


அன்புலட்சுமி தற்கொலையே


செய்திருக்கமாட்டாள்.

                                          --கரிகாலன்



             ***********************************************************************


அருந்தமிழ்


சுசி...நீ காதல்கொண்டு

சொன்னதையெல்லாம்
 

சொன்னாயென
 

ஒரு
 வார்த்தையில் சொல்லிவிட 

என்
 தமிழொன்றும் 

ஏழை
 மகளல்லள்

அவள்
 களஞ்சியமெல்லாம் 

அழகுச்சொல்கொண்டாள்


அசைத்தல்
,அறைதல்,அரற்றுதல்

இசைத்தல்
,இறுத்தல்,இயம்புதல்

உரைத்தல்
,உளறுதல்,உன்னுதல்

என்னுதல்
,ஓதுதல்,கதைத்தல்,கத்துதல்,

கரைதல்
,கழறுதல்,கிளத்துதல்

குயிலுதல்
,குழறுதல்,குறித்தல்

கூறுதல்
,சாற்றுதல்,செப்புதல்

சொல்லுதல்
,நவிலுதல்நுவலுதல்,

நுதலுதல்
,நொடித்தல்,பறைதல்,

பகருதல்
,பயிருதல்,பன்னுதல்

பிதற்றுதல்
,பினாத்துதல்

பீற்றுதல்
,புகலுதல்,புலம்புதல்,

புகழுதல்
,பேசுதல்

பொழிதல்
,போற்றுதல்,மாறுதல்

மிழற்றுதல்
,முழங்குதல்,மொழிதல்

விள்ளுதல்
,விளத்தல்,விளம்புதல்,

விடுத்தல்
,விதத்தல்,வலித்தலென 

வாய்வலிக்கச்
 சொல்லலாம் 

நாளும்
 நற்றமிழ்

சுசி
.. தமிழ்க்கவி 

நாள்தோறும்
 பூப்பதா அதிசயம்
!


                                    
--கரிகாலன்



                   *********************************************************************



இருள்
இந்நகருக்கெதற்கு 
இவ்வளவு வெளிச்சம்
கடவுளை ஏமாற்றிவிடலாம்
கண்காணிப்புக் 
கேமராக்களை ?
கிராமத்துக் கர்ப்பிணிப் 
பெண்ணுக்கு 
கழிப்பறையில்லா இரவுவீதியில் முட்டிக்கொண்டு வருகிறது
அனாவசியமாய்ப் பிறந்து 
தொலைத்த சிசு
இளமங்கையொருத்தியின் 
கரத்தில் கனக்கிறது
குப்பைத்தொட்டியில் 
வீசவேண்டும்
வாடிக்கையாளன் 
தகைந்துவிட்டான்
ஐந்து நிடத்துக்குப் 
பேருந்து நிலையத்தின்
சிறு சந்து போதும்
சிறுவனின் கையிலிருக்கும் 
பிளேடின் முனை 
மழுங்கவேயில்லை
பாவம் அவனுக்கு 
பசியெடுக்கிறது
அமைச்சர் போகும்வரை 
அநியாயத்துக்கு 
நிறுத்திக்கிடக்கிறது பேருந்து
கல்லூரி யுவதிக்கு
நாப்கின் ஈரமாகிவிட்டது
காதலுக்கு 
இடையூறான கணவன் 
 
உடலிருக்கும் சூட்கேசை 
ஈக்கள் மொய்க்கின்றன
இதைச் சாக்கடையில் 
எறியவேண்டும்
இப்புனித நகருக்கு 
தேவைப்படுவதெல்லாம்
இப்போது 
சிறிது இருள் மட்டுமே!
                                             
                               --கரிகாலன்



                  ******************************************************





இப்படிக்கு உங்கள் சூத்தி
ரன்

என்னைஆதிதிராவிடர் என்றுதான்
உங்கள் சுவரொட்டிகள்
கௌரவப்படுத்துகின்றன
இப்போது இந்து என்ற
மகுடத்தையும் சூட்டுகிறீர்கள்
சரி....
நீங்கள் பின்னர் கொடுக்கும்
ராஜேந்திரனின் வாளோ
கோட்சேவின் துப்பாக்கியோ
ஏதோ ஒன்றை எடுத்து
உங்கள் எதிரியை
நான் முடித்துவிடுவேன்
முடித்தவுடன்
என்னை உங்கள் தலைவனாக
ஏற்றுக்கொள்வீர்களா?
அல்லாது...
உங்கள் எதிரி
என்னை முடித்துவிட்டால்
உங்கள் சுடுகாட்டில்

என்னைப் புதைப்பீர்களா?

                        --ராம்வசந்த்

                *******************************************************
 

நாங்கள் அப்போது...
அரசுக் கல்லூரியில் இளங்கலை படித்தோம்
அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்து
பொறியியல் பயின்றார்கள்
நாங்கள் பல்லவன் பேருந்து
படிக்கட்டில் தொங்கினோம்
அவர்கள் மோட்டார் சைக்கிளில்
ஒய்யாரமாய் உலாவினார்கள் 
நாங்கள் நடைபாதைக் கடைகளில் 
உடைகள் வாங்கினோம் 
அவர்கள் ரேமாண்ட்ஸ் நார்த் ஸ்டார் 
பூணிப் பிரகாசித்தார்கள்
நாங்கள் குவாட்டர் வாங்கி 
பகிர்ந்து உண்டோம்
அவர்கள் பொறுப்பின்றி 
பியரை ஆளுக்கொன்றாய் குடித்தார்கள்
நாங்கள் பரங்கிமலை ஜோதியில்
மலையாளப் படம் பார்த்தோம் 
அவர்கள் மவுண்ட் ரோடு தேவியில் 
ஆங்கிலப் படம் ரசித்தார்கள்
நாங்கள் குமுதம் விகடன் புரட்டினோம்
அவர்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் வாசித்தார்கள்
நாங்கள் ஆபாவாணன் கண்டு வியந்தோம்
அவர்கள் ஸ்பீல்பெர்க் தேடி ஓடினார்கள்
நாங்கள் பன்னீர் சோடா குடித்தோம் 
அவர்கள் கோல்ட் ஸ்பாட் பருகினார்கள் 
நாங்கள் சாத்தனூர் செஞ்சி சென்றோம் 
அவர்கள் சிம்லா குலுமணாலி புறப்பட்டார்கள் 
நாங்கள் அரியர்ஸ் வைத்தோம் 
அவர்கள் ஜி ஆர் இ ,டோஃபல் எழுதினார்கள் 
இத்தனைக்குப் பிறகும்...
அவர்கள் கல்லூரிப் பெண்களுக்கு
எங்களைத்தான் பிடித்திருந்தது.


                                           
 - ராம்வசந்த்



        ***********************************************************


கடைசி
 கோரிக்கை
============================
இதோ இந்த பூமி சூல்கொண்ட காலங்கள் 
நானறிவேன் 
பச்சைப் பசேலென மலர்ந்து 
பின் மஞ்சள் உருமாறி நெற்கதிர் சுமக்கையில் 
நிறைமாத கர்ப்பிணியின் அழகொளிரும் 
இப்பூமி முப்போகம் தந்ததாக வரலாறு கூறுகிறது 
அரசாளும் வேந்தர்களும் இப்பூமிக்காரனின் 
குடையின் கீழ் இருப்பரெனப் புலவர்கள் மொழிந்தனர் 
கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரு நாடென 
இங்கொருவன் குதித்தான் 
வாடியபோது வாடினான் வேறொருவன் 
ஜெய்கிஸான் என இப்பூமிமார்க்கம் அறிந்தவர் ஓதினர் 
எங்கள் ஜீவநதி இதன் வரப்புகளில்தான் ஓடியது
இங்குள்ள ஏரிகளில் எம் பால்யங்கள் முழுமையடைந்தன 
இப்பூமி ஞானம் கொண்டவரையே பெண்டீர் மணந்தனர் 
அந்திகளில் காதலும் விழாக்களில் வீரமும் இங்கேதான் தழைத்தன 
எம் பாட்டன் இறந்தபோது பரம்பரை மானெமென 
எங்கள் கிழவி அவள் தலைமுறைகளிடம் 
இதைத்தான் எழுதிக் கொடுத்தாள் 
இப்போது அராசங்க வாகனங்களில் வந்து அதைக் கேட்கிறீர்கள் 
வரும் அந்நிய மூதலீட்டை எம் சிறுவாடு கொண்டு எதிர்க்காமல்
ஒரே ஒரு மரத்தை மட்டும் விட்டு வைக்கக் கோருகிறோம் 
....
எம் எடை தாங்குமளவு.
                       
                           - ராம்வசந்த்


               *******************************************************************


பெண்ணே... நான் நீயாக வேண்டும்

-------------------------------------------------------
பூவாகிய பொழுதில்
உன்னுள் கிளர்ந்த
இன்ப பயம்
எப்படி..எப்படி இருக்கும்?
நாடி நரம்பெல்லாம் பரவும்
இன்ப அதிர்வுகளால்
இதயொலி துடிக்குமோ?
அல்லது
லாட்டரி பரிசில்
கோடி ரூபாய் அடைந்தவனின்
ஆனந்தம்போல்......
நெஞ்சில் பரவச அலைகள்
எழும்பி எழும்பி அடங்குமோ?
நொடிக்கொரு
புதுப்புது
உணர்வுப் பூக்கள்
மனதினில் மலர்ந்து உதிர
வீதிகளில் ஆண் விழிகளை
அலட்சியம் செய்து
கன்னிப் பதவியேற்றதின்
பெருமிதத்தில்
கர்வ நடை நடப்பாயே
உண்மையில்
அவர்களின் விழிகளின் வழியே
இதயாதிக்கம் செலுத்தத்தானே
உன்னை நீ
அலங்கரித்துக் கொள்கிறாய்?
இல்லையெனில்
வேறு எதற்காகவாம்?
அறிந்துக் கொள்ள.....
பெண்ணே .....நான்
நீயாக வேண்டும்!
உன்னேயே வழங்கத்
தீர்மானித்து.......
முதல் முத்தம் தர
வரும்போது
என்ன என்ன உணர்வுகள்
உன் னுள் பரபரத்து ஆர்பரிக்கும்?
நாணமும் சிறு அதிர்வும்
சேர்ந்து வர.....
இடையில் படபடப்போடு
இன்பமும் ஓடிவருமோ?
பெண்ணே ......நான்
நீயாக வேண்டும்!
தாக தவிப்பில்
ஐஸ்மோர் அருந்தலில்
ஏற்படும்
உள்ளம் குளிர்தலின்
சுகத்தின் நிறைவை
சங்கம சந்தோசங்களில்
எய்துவது நீதானே?
பொதுவாகவே...
தருபவனுக்கு இருக்கும்
பெருமையும் சுகத்தையும் விட
மனம் நிறைந்த மகிழ்வில்
அமிழ்ந்து போவது
பெறுபவள் தானே?
பெண்ணே .......நான்
நீயாக வேண்டும்!
மனிதப்பிறவியின்
மகத்துவ குணங்களின்
தொகுப்பாய் வடிவெடுத்த
பெண் பிறவியே..... என
பேதமில்லாமல் மதிக்கும்
தாய்மைப் பதவியில்......
உன்னுள் உருவாகும்
ஜீவன் பற்றிய பூரிப்பில்
கற்பனைக் கரங்களால்
அந்த ஜீவனை
அலுத்துச் சலிக்காமல்
பலவிதமாக
வடிவமைத்து வடிவமைத்து
அதனுள்ளே மூழ்கி மகிழ்ந்து
உன்னை மறப்பாயோ?
பெண்ணே........நான்
நீயாக வேண்டும்!
மழலையின்
மலரிதழ்கள் உதடுகள்
உன்னின்
பால் சுரபியை
சுவைக்கும்போது.....
உன்னுள் ஜீவ ஊற்று
சுரந்து விரையும் லயிப்பில்
திளைக்கும் போதே.......
அனுபவித்த
பிரசவ வேதனையையும்
ரண வலியையும்
நினைப்பதில் மலைப்பு வர...
மழலையின் மென்முடி வருடி
மிக மெதுவாய் இதழ் பதித்து
உள்ளம் கரைவாயோ?
பெண்ணே....நான்
நீயாக வேண்டும்!
உன்னுள் மறைந்திருக்கும்
நாணமும் மென்மையும்
உன்னுள் நிகழும் சில
அதிசயங்களும்
ஒரு உயிரின்
படைப்பிலும் வளர்ப்பிலும்
நீ படும் துயரங்களும்
சகிக்கும் தியாக வலிகளும்
ஓ......பெண்ணே
இவையாவும்
நீயாக இருந்து
நான் அனுபவிக்க வேண்டும்!
பெண்ணே .....நான்
நீயாக வேண்டும்!

--------மா.வே. இரவிசந்திரன்

(1987 ல் வெளியான "எனது பூமியில்" கவிதைத் தொகுப்பிலிருந்து ....அருமை நண்பர் முல்லைநாதன் அவர்களால் எனக்கு அறிமுகமானது இக்கவிதை.)



                  ********************************************************************




அம்மாக்களின் அவஸ்தை


இரண்டு நிமிசத்துக்கு ஒரு டிரெய்ன்
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள் என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து.


- பு
தியமாதவி சங்கரன்.


                  *****************************************************





ஒரு கட்டு வெற்றிலை           
பாக்கு சுண்ணாம்பு

புகையிலை
வாய்கழுவ நீர்
பிளாஸ்க்

நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி

வத்திப்பெட்டி/சிகரெட்
சாம்பல்தட்டு

பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு
        *****

அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கும்வரை
        *****

             - நகுலன்.   (அந்திமழை இதழ் மற்றும் செல்வராஜ் ஜெகதீசன்).
                       

                      *****************************************************




சதுரத்திலிருந்து

செவ்வகத் திரை நோக்கிப்
பாயும் ஒளிக்கற்றையை ஊடறுத்து
மேல் சுழலும் பீடிப் புகை நாற்றத்தின் பரவலில் தரை டிக்கெட்டில்
வெற்றிலைச் சாற்றுத் துப்பல் குவித்த மணற்சிறுகுன்றுகளின் நடுவே
அங்கிங்கு மஞ்சட்கறை ஒற்றிய வேட்டியை மடித்துக் கட்டிக் குந்தியிருந்து
வாத்தியாரின் பல்லாண்டு வாழ்க மொதோ நா மொதோ ஆட்டத்தில்
சாரல் விழும் நிவிஸ் ரீலைப் பார்க்கப் பொறுமையின்றியோ
அப்போதுதான் சின்னக்குயிலியிலிருந்து மயிலைக் காளைகள் பூட்டிய
பலூன்கள் கட்டிய வண்டிகளில் வந்திறங்கி சோபா டிக்கெட்டில் உள்நுழைந்த
கலர் தாவணிகளின் வெண்பொங்கல் சிரிப்பில் கிறங்கியோ
விசிலடித்துக் கூவிய பொன்னான்களும் ரங்கான்களும் அறிந்திருக்கவில்லை
இன்னும் சில பல நூறு நாட்களில்
அந்த வேல்முருகன் கொட்டாயின் ஓலைக் கூரை பறந்து போகுமென்று;
தேசிய நெடுஞ்சாலையாகிவிட்ட கிராமத்து மண்சாலையில்
காளை வண்டிகள் சீறிப் பாயாதென்று;
பொங்கலுக்கும் தாவணிகளுக்கும் பாரம்பரியப் புன்னகை இருக்காதென்று;
லுங்கியை மடித்துக் கட்டி வேல் மல்ட்டிப்லெக்சுக்குள் நுழைய முடியாதென்று;
வாத்தியார் படமானாலும் நூறு நாட்கள் என்பது நான்கு நாட்கள்தான் என்று.

                                                                                                 -ஸ்ரீபதி பத்மநாபா


                 ******************************************************

புளியமரங்கள் பிடுங்கியெறியப்பட்டு
அகலப்படுத்தப்பட்ட இந்நாலுவழிச் சாலையில்
ஆள்பிடிக்க தெருவோர உணவகங்களை
ஒண்டிநிற்க வேண்டியிருக்கிறது. 
ஊர்நடுவே பழைய செலவந்தனொருவன் 
கௌரவத்திற்கென நட்டத்தில் நடத்தும்
புராதான லாட்ஜொன்றில்
சல்லிசான வாடகையில்
நிரந்தர அறையொன்றிருந்தும் 
வெட்டவெளியில் புணர அழைப்பவனை
மறுதலித்துப் போகுங்கால் 
நாளைய பகலையுங்கூட பட்டினியில்
கடத்த வேண்டியிருக்கும். 
முடிந்த வரையில் கையிலிருக்கும் ஆணுறையாவது 
கட்டாயப் படுத்தியாக வேண்டும்
இவனொருவன் வருமானத்தை நம்பி 
ஒரு குடும்பம் இருக்கக் கூடும்.
                                      --சுரேஷ் பரதன்


         **************************************************************

காற்றடைத்த பை.
======================
ஊதியூதிப் பெருசாக்குகிறான்
பல வண்ணங்களில் இருக்கும்
பலூன்களை.
அவனும் ஒரு இறைவனே.
அவன் ஊதும் போது
கைகளின் திருகல்களில்
நிமிடங்களில் பிறக்கின்றன
மான்களும் ஒட்டகங்களும்
கிளிகளும் இன்ன பிற
விலங்குகளும் பறவைகளும்
குழந்தைகளின் அவரவர்
விருப்பங்களுக்கேற்ப.
ஒரு இரண்டு ரூபாயில்
ஊர்க் குழந்தைகளைச்
சிரிக்க வைக்க முடிந்த
அவன் பலூன்கள்
பலனற்றுப் போயின பசியிலழும்
அவன் குழந்தையின் முன்.
ஊதி ஊதித்தான் அணைக்கப் பார்க்கிறான்
தன் வயிற்றிலும் நெஞ்சிலும்
மூண்ட அக்னியை.
ஊதி ஊதித்தான் எரிக்கப் பார்க்கிறான்
தன் வீட்டின் சமையலறை அடுப்பை.
ஊதும் போதே வெடிக்கின்றன சில
அவனுடைய எதிர்கால
நம்பிக்கைகளைப் போல.
ரு காற்றடிப்பானை
கைக்கொள்ள முடியாதவனால்
ஊதியூதித்தான்
நிரப்பிக் கொள்ள முடியும்
காற்றில்லா பலூன்களையும்
அவனையுஞ்சேர்த்து
அவனுடன் வாழும் மூன்று
காற்றடைத்த பைகளையும்.
--- சுரேஷ் பரதன்   (திணை இதழ் 14 ல் வெளியான கவிதை).



                **********************************************************************************



பயணம்
போனவன் குறிப்புகள்
--------------------------------------------------------
இயல்பாய் நகரும் நாட்கள் 
முடிவுக்கு வரும்.
எப்போ பயணம் என குரல் கேட்டால் 
தூக்கி வாரிப் போடும் அவளுக்கு.
முதல்நாளே வீடு
துக்கம் சூழ்ந்து கொள்ளும்
எரிந்து , எரிந்து விழுவாள் காரணமில்லாமல்
காரணம் அவளுக்கே சாஸ்வதம்
நேரங்கடப்பதை சபிப்பாள்
நிமிட நேர முத்தங்களை
கவனமாய் சேமிப்பாள்.
அந்தி மயங்கும் இருள்
அவள் முகம் புகுந்து கொள்ளும்.
குழந்தைகளை உறங்கப் போட்டு
தலை கோதி மார்பில் சாய்வாள்
உச்சப்பட்ச கலவிக்கு தலைமை ஏற்பாள்
களைப்பின் ஊடே
இனிமே எப்போ? 
இரண்டு வருடமா, மூன்றா?
கண்ணீரோடு வரும்
கேள்விகளில் உயிர் வெந்து தணியும்.
இந்த இரவு விடியாமலே போகக் கூடாதா என
கொடுக்கும் முத்தங்களில் 
கண்ணீரின் சுவையே கலந்து இருக்கும்.
அப்பா புறப்படும்பொழுது
யாரும் அழக்கூடாது என
குழந்தைகளுக்கு சொல்லிவிட்டு
உதடு கடித்து அழுகை விழுங்குவாள்.
பெட்டி கட்டும்பொழுதெல்லாம் மறக்காமல்
ஒவ்வொன்றாய் வைத்துவிட்டு
சட்டை ஒன்றை ஒளித்து வைத்துக் கொள்வாள்.
வாசலில் கார் வந்து நின்றதும்
தொண்டை வறண்டு போய்
உயிர் நனைக்க தண்ணீர் அருந்துவாள்
'விசுக்' கென்று பிள்ளை ஒருத்தி விசும்பி விட்டால்
வீடே பற்றி எறியும்
கணங்கள் தணலின் உக்ரமாய் நகரும்.
விமான நிலையம் வந்ததும்
பிள்ளைகள் போல
கைகளை பிணைத்துக் கொள்வாள்
'
சீக்கிரம் வந்திடுங்க 'எனும் வார்த்தை
பாதிக் காற்றாகவும் 
பாதிக் குரலாக உடைந்து வெளிவரும்.
உள் நுழைகையில் 
திருநீற்று நெற்றியில்
சிலுவைக் குறி போடுவாள்
கண்கள் முழுதும் ரத்த ரோஜா பூத்திருக்கும்.
அவளின் கண் பார்வையும் கை அசைவும்
மறைகிற வரை 
அடங்கிக் கிடந்த துக்கமெல்லாம்
கழிவறை நுழைந்ததும் உடைப்பெடுக்கும்.
குலுங்கி அழுது முகம் கழுவ 
பட படப்பில் மூச்சடைக்கும்.
நினைவு முட்களை சுமந்து
விமானத்தில் அமர்வேன்
வெறும் உடலைச் சுமந்து 
தரை விட்டு புறப்படும் விமானம்.
அந்தரத்தில் வாழ்வு 
நின்று சிரிக்கும்.
                              -- முல்லைநாதன்


         ************************************************************


டோல்கேட்
ஃப்ளை ஓவர்
ஃபோர்லான் 
சர்வீஸ் ரோடு
மோட்டல் 
பெட்ரோல் பங்க்
என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டே வருகிறாள் ஹேமா
நெல்லுவயல் 
வாழத்தோப்பு
கம்மாயி
வெத்தலக் கொடிக்கால்
செவ்வந்தித் தோட்டம்
கமலைக் கிணறு
என்று சிறு வயதில்
என் விரல்வழி எண்ணிக்கையில் கடந்து வந்த
அதே சாலை வழிப் பயணத்தில் 
                      -சுவாதி சா முகில்
                 *******************************************************


















































*                   ****************************************************



       என் அன்னையைப் பற்றி கடந்த ஆண்டு நான் எழுதிய வரிகளை
மறுபதிவு செய்கிறேன். நண்பர்களே, உங்கள் வேண்டுதல்களும்,
வாழ்த்துகளும் இவரைப் பூரண நலமுடன் மீட்டுத்தரும் என பெரிதும்
நம்புகிறேன்.  
நடக்கத் தருவாய் நலம்!

- கு.மா.பா.திருநாவுக்கரசு


மடிசுமந்து எமைப்பெற்று
மனிதர்களாய் ஆக்கிவிட்ட
அடியேனின் அன்னைக்கு
அகவை எண்பத்து எட்டு!
பிறந்தநாள் கொண்டாட்டம்
பெரிதாக இலை எனினும்,
வரமாக வந்த தாயை
மறந்துவிடும் மனம் உண்டா?
கு.மா.பா. மனையாளாய்
குறையின்றி எழு மக்கள்
தமைப்பெற்று ஆளாக்கிய
தாயின் சுமை எவரறிவார்?
வளமோடு வாழ்ந்தாலும்
வறுமையிலே வீழ்ந்தாலும்
தலமாக இல்லத்தை
தாங்கியதித் தாய் அன்றோ!
வந்தார்க்கு உணவிட்டு
வருவோர்க்கும் உலையிட்டு
இலையென்று சொல்லாமல்
இலைபோட்டக் கரமுடையாள்!
கற்றறிந்த அறிவற்றும்,
கல்விக்குப் பொருள் தந்து
பெற்று எமை ஆளாக்கிய
பேரறிவு மனமுடையாள்!
மருமகள்கள் மனமுவந்து
மாமியார் எனப் போற்ற,
பெருமிதமாய் வாழ்வித்த
பிரியமுள்ள எங்கள் தாய்!
பேரர்கள் வழி கொள்ளுப்
பேரர்களும் நிறைந்திருக்க,
திருவாரூர் மண்தந்த
ஜெயலட்சுமி பெயருடையாள்!
கொடுத்ததெலாம் கொடுத்தெங்கள்
குடும்பத்தை காத்த இவர்-இன்று
படுக்கையிலே விழுந்துவிட்டு
படும் துயரின் சோதனை ஏன்?
அயராமல் உழைத்தெம்மை
ஆளாக்கிய தெய்வத்தை - தன்
வியர்வையைப் பன்னீராய்
விழிப்புணரத் தெளித்தவரை,
இயலாமை எனும் மூப்பு
எப்படித் தான் தீண்டியதோ? -மதி
மயக்க ஒரு மறதிநோய்
மறைந்திருந்து தாக்கியதோ?
வியந்தபடி வேண்டுகிறோம்!
வேதனைகள் தீர்த்திடுவாய்!
நடமாடும் தெய்வமென
நலம்பெற்று எழுந்து இவர்,
திடமோடு வாழ்வதற்கு
தெய்வங்கள் அருளட்டும்!
நண்பர்களே.. வாழ்த்துங்கள்!
நலம்விரும்பி வாழ்த்துவதால்,
அன்னையிவள் முன்போல
அகம்மலர வலம் வருவார்!

தடம்பார்த்து நடப்பதற்கு
தாய் எமக்கு வழி வகுத்தாள்! - இவள்
நடமாட, நலம் வாழ,
நல் வாழ்த்தை வழங்கிடுவீர்!
அன்புடன்,
கு.மா.பா.திருநாவுக்கரசு
நாள்: 4/7/2017



          *********************************************************





காரணம்

மோட்டார் சைக்கிளின்
பின்னமர்ந்து
தலைவன் தலை கோதும்
காதலி

நேராப்பாத்து ஓட்டு லூசு
என்ற பின் முதுகில்
அவன் வாங்கும்
மென் கடி
மிகச் சரியாக முகத்தில்
உச்சா போகும்
மழலை மகள்
என்றோ ஒரு நாள் வந்த
மாமனாருக்கு
எட்ட நின்று
இழுத்துப் போத்திக் கொண்டு
டபரா செட்டில்
மருமகள் கொடுக்கும்
சர்க்கரை குறைத்த
டிகிரி காப்பி
மாமாவைப் பக்கத்தில்
வைத்துக் கொண்டே
இன்னொரு துண்டு
மீன் வைக்கும் சகோதரி
உலகமே கழுவி ஊற்ற
மாமியார்
நல்லார்க்கீங்களா தம்பி
என மருமகனிடம்
தரையைப் பார்த்துக் கேட்பது
நம்பிக்கை இராமேஸ்வர பாலத்தை
கவரிங் வார்த்தைகளால்
தகர்த்த
துரோகக் காயங்களை
ஆறவிடாமல்
ஊதி உயிர்ப்பிப்பதில்
இருக்கிறது நட்பே
உயிர்வாழக் காரணங்கள்
காரணிகள்
                      -- வன்னி



                  *********************************************************************************


பாதாளகரண்டி

வீட்டில் மூன்று கிணறு ..
தோட்டத்திலூம் வயலிலும் அஞ்சாறு கிணறு ...
வாளி விழுந்தால் எடுக்கப் பாதாளகரண்டி ஒன்றுண்டு...
அப்பத்தாக்கு அதன்மேல் தனிப்பெருமை உண்டு
பிணையாகப் பொருள் தராமல்
கடவுளே கேட்டாலூம் தரமாட்டாள்..
கேதத்துக்குப் போய் வந்தவர்களிடம்
 வீட்டுச்சாவியை வாங்கித்தந்து
இஞ்ச... இத வச்சுட்டு அத எடுத்துட்டு வா... என்பாள்
கிலிங் கிலிங் என்ற ஒலியுடன்
ஆட்டிக்கொண்டே எடுத்துவருவேன்..
பால் செம்பு... கரிக்கருவா... மேல்துண்டு...
மோதிரம்.. என பிணைப்பொருட்கள் .. பணம் தவிர!
இப்போதும்
இருக்கிறது பாதாளகரண்டி பரணில்...
அப்பத்தாவும்
திண்ணையில்...

                         -- பாரதி கண்ணம்மா



                  **********************************************************************************




எதிர்நீச்சல் மீன்களுக்குப் புதிதல்ல
புதைத்தாலும் தலைதூக்கும் விதைமெல்ல
உயரங்கள் எப்போதும் நிலையல்ல
விழுந்தாலும் நடைபழகும் மழலைமெல்ல
கடிகார ஓய்வென்றும் அழகல்ல
மலையேற கோபுரங்கள் செடிபோல
நதிமேவும் மேடுபள்ளம் நிலையல்ல
ஆழ்கிணறும் நீரிழக்கும் காலஞ்செல்ல

                                                       
                                     ############



அதிகாலையில் குளத்தங்கரையில்

கூடி நின்ற ஊர் பேசிக் கொண்டது
நள்ளிரவில்தான் தூக்கு மாட்டியிருப்பார்
சீனித்தாத்தா என்று
கடந்த வயதையும் எஞ்சிய ஆயுளையும் தவிர
வேறொன்றும் பாரமில்லை அவருக்கு
மண்வெட்டியைத் தோளில் ஏன்
தொங்கவிட்டிருந்தார் என்பதைத்தான்
யாராலும் யூகிக்க முடியவில்லை
                                     
                                                
-- ஆன்மன்



               
**
***************************************************************************


.சின்னய்யாவெட்டுன
எங்க தண்ணிக்கெணறு.
ஏதோவொரு
கோவத்துலகீழாக்கப்பாத்தா
ரெண்டாழம் உயரம் மண்கண்டம்

மண்கண்டத்துக்குகீழ
நாலாழம் உயரம் சரளைக்கல்லு

எப்படியும்
எட்டாழமுயரம்
கருங்கல்லுக

அதுக்கு கீழ
சீனிக்கல்லும்
சுண்ணாம்புக்கல்லுமா
கொறஞ்சது
பத்து பன்னெண்டாழமடி
தாத்தாவும்
பாட்டியுமா
அதே கெணத்துல விழுந்து
செத்துப்போனா பாட்டி
அவரோட பங்க
பெரியாவுக்கு வித்தாரு.
பெரியா
மொத்தமா
எங்களுக்கு வித்தாரு.
நாங்க
காத்தாடிக்காரனுக்கு
விக்கும்போது
பன்னெண்டாழமடி
ஓலக்கொடிய முடிஞ்சி
கெணத்துக்குள்ள
ஒரு மொனய வீசி
இத புடிச்சிக்கிட்டே
மேல வந்துருனு
பொலம்புன தாத்தாவ
காத்தாடிக்காரனுக்கு
கொஞ்சம் மனம்நலம்
சரியில்லாதவரென்றே
அறிமுகப்படுத்தினோம்
   
- சோலை.சீனிவாசன். (கள்ளிக்குருவி)   




                *********************************************************************************




      

                                                             சுப்பிரமணிய சர்மா

திருக்கோளூர் 
பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, 
அது என்ன ரகசியம் ?
ரகசியம் ஏதும் இல்லை.
சாதாரண ஒரு மோர் விற்கும் அம்மையார்
வைணவ ஆச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த
எண்பத்து ஒன்று
கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.
அத்தகைய இந்த ஊருக்கு ராமானுஜர் வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.
அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, ‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறார்.
அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.
இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு வைணவத்தை பொருத்த மட்டும் பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அந்த
எண்பத்து ஒன்றும் இதோ!!
அழைத்து வருகிறேன் என்றேனோ, அக்ரூரரைப் போலே!
அகமொழித்து விட்டேனோ, விதுரரைப்போலே!
தேகத்தை விட்டேனோ,
ரிஷி பத்தினியைப் போலே!
தசமுகனைச் செற்றேனோ,
பிராட்டியைப் போலே!
பிணமெழுப்பி விட்டேனோ, தொண்டைமானைப்போலே!
பிணவிருந்திட்டேனோ, கண்டாகர்ணனைப்போலே!
தாய்கோலம் செய்தேனோ,
அனுசூயையைப் போலே!
தந்தை எங்கே என்றேனோ, துருவனைப்போலே!
மூன்றெழுத்து சொன்னேனோ, க்ஷத்ரபந்துவைப்போலே!
முதலடியை பெற்றேனோ,
அகலிகையைப் போலே!
பிஞ்சாய்ப் பழுத்தேனோ,
ஆண்டாளைப் போலே!
எம்பெருமான் என்றேனோ,
பட்டர்பிரானைப் போலே!
ஆராய்ந்து விட்டேனோ,
திருமழிசையார் போலே!
அவன் சிறியனென்றேனோ,
அழ்வாரைப் போலே!
ஏதேனும் என்றேனோ,
குலசேகரரைப் போலே!
யான் சத்யம் என்றேனோ,
அழ்வாரைப் போலே!
அடையாளம் சொன்னேனோ,
கபந்தனைப் போலே!
அந்தரங்கம் சொன்னேனோ,
திரிஜடையைப் போலே!
அவன் தெய்வம் என்றேனோ, மண்டோதரியைப் போலே!
அஹம் வேத்மி என்றேனோ, விஸ்வாமித்திரரைப் போலே!
தேவுமற்றரியேனோ,
மதுரகவியாரைப் போலே
தெய்வத்தை பெற்றேனோ,
தேவகியைப் போலே!
ஆழிமறை என்றேனோ,
வசுதேவரைப் போலே!
ஆயனை(னாய்) வளர்த்தேனோ, யசோதையைப் போலே!
அநுயாத்திரை செய்தேனோ, அணிலங்கனைப் போலே!
அவல் பொரியை ஈந்தேனோ,
குசேலரைப் போலே!
ஆயுதங்கள் ஈந்தேனோ,
அகஸ்தியரைப் போலே!
அந்தரங்கம் புக்கேனோ,
சஞ்சயனைப் போலே!
கர்மத்தால் பெற்றேனோ,
ஜநகரைப் போலே!
கடித்து அவனைக் கண்டேனோ, திருமங்கயாரைப் போலே!
குடை முதலானதானேனோ, ஆனந்தால்வாழ்வான் போலே!
கொண்டு திரிந்தேனோ,
திருவடியைப் போலே!
இளைப்பு விடாய் தீர்தேனோ,
நம்பாடுவான் போலே!
இடைக்கழியில் கண்டேனோ, முதலாழ்வார்களைப் போலே!
இருமன்னரைப் பெற்றேனோ,
வால்மீகரைப் போலே!
இருமாலை ஈந்தேனோ, தொண்டரடிப்போடியார் போலே!
அவனுரைக்க பெற்றேனோ,
திருக்கச்சியார் போலே!
அவன்மேனி ஆனேனோ,
திருப்பாணரைப் போலே!
அனுப்பி வையுமேன்றேனோ,
வசிஷ்டரைப் போலே!
அடி வாங்கினேனோ,
கொங்கில் பிராட்டியைப் போலே!
மண்பூவை இட்டேனோ,
குரவ நம்பியைப் போலே!
மூலமென்றழைத்தேனோ,
கஜராஜனைப் போலே!
பூசக் கொடுத்தேனோ,
கூனியைப் போலே!
பூவைக் கொடுத்தேனோ,
மாலாகாரரைப் போலே!
வைத்தவிடத்து இருந்தேனோ,
பரதரைப் போலே!
வழி அடிமை செய்தேனோ, இலக்குவணனைப் போலே!
அக்கரைக்கே விட்டேனோ, குகப்பெருமாளைப் போலே!
அரக்கனுடன் பொருதேனோ, பெரியவுடயாரைப் போலே!
இக்கரைக்கே செற்றேனோ,
விபீஷணனைப் போலே!
இனியதென்று வைத்தேனோ,
சபரியைப் போலே!
இங்கும் உண்டென்றேனோ, பிரஹலாதனைப் போலே!
இங்கில்லை என்றேனோ,
திதிபாண்டனைப் போலே!
காட்டுக்குப் போனேனோ,
பெருமாளைப் போலே!
கண்டுவந்தேன் என்றேனோ,
திருவடியைப் போலே!
இருகையும் விட்டேனோ,
திரௌபதியைப் போலே!
இங்குபால் பொங்கும் என்றேனோ, வடுகனம்பியைப் போலே!
இருமிடறு பிடித்தேனோ, செல்வப்பிள்ளையைப் போலே!
நில்லென்று(னப்) பெற்றேனோ, இடையற்றூர்நம்பியைப் போலே!
நெடுந்தூரம் போனேனோ,
நாதமுனியைப் போலே!
அவன் போனான் என்றேனோ, மாருதியாண்டான் போலே!
அவன் வேண்டாம் என்றேனோ,
அழ்வானைப் போலே!
அத்வைதம் வென்றேனோ, எம்பெருமானாரைப் போலே!
அருளாழங் கண்டேனோ,
நல்லானைப் போலே!
அனந்தபுரம் புக்கேனோ,
ஆளவந்தாரைப் போலே!
ஆரியனைப் பிரிந்தேனோ, தெய்வவாரியாண்டானைப் போலே!
அந்தாதி சொன்னேனோ,
அமுதனாரைப் போலே!
அனுகூலம் சொன்னேனோ,
மால்ய்வானைப் போலே!
கள்வனிவன் என்றேனோ,
லோககுருவைப் போலே!
கடலோசை என்றேனோ,
பெரியநம்பியைப் போலே!
சுற்றிக்கிடந்தேனோ,
திருமாலையாண்டான் போலே!
சூலுறவு கொண்டேனோ,
திருக்கோட்டியூரார் போலே!
உயிராய பெற்றேனோ,
ஊமையைப் போலே!
உடம்பை வெறுத்தேனோ,
திருனறையூரார் போலே!
என்னைப்போல் என்றேனோ,
உபரிசரனைப் போலே!
யான் சிறியன் என்றேனோ, திருமலைநம்பியைப் போலே!
நீரில் குதித்தேனோ,
கணப்புரதாளைப் போலே!
நீரோருகம் கொண்டேனோ,
காசிசிங்கனைப் போலே!
வாக்கினால் வென்றேனோ,
பட்டரைப் போலே!
வாயிற் கையிட்டேனோ,
எம்பாரைப் போலே!
தோள் காட்டி வந்தேனோ,
பட்டரைப் போலே!
துறை வேறு செய்தேனோ,
பகவரைப் போலே!

           
               ***************************************************************************************

பாதி விழிப்பில், கை துளாவலில்
இன்மை உணர்ந்தும்,
உலாவித் திரும்பக் கூடும்
என்றெண்ணி உறக்கம் தொடர்ந்தாயா?
அங்கும் இங்கும் எங்கும் இல்லை
என்று ஊர்ஜிதம் செய்த பின்பும்
நடந்ததை நம்ப மறுத்தாயா?
கடந்து செல்வதா, காத்து நிற்பதா
எனக் கலங்கி நின்றாயா?
உனைப் போல் சாலப்பரிந்து
உவகை அளிப்பவர் யாருமின்றி
வாடவும் கூடுமென்றெண்ணி
தத்தளித்தாயா?
பிரிய கால நினைவுகள் அனைத்தும்
பொக்கிஷமென அசை போட்டு சுகித்தாயா?
இல்லை, கரம் விழுந்த செங்கனல் துண்டென்று
சடுதியில் உதறிக் களைந்தாயா?
அடுத்து வந்த வசந்தங்கள் அனைத்தும்
தாபமும் தவிப்புமின்றி
சினத்தால் நிறைத்து கடந்தாயா?
எதிர்கொள்ள நேருங்கால் கேட்பதற்கென
வினாக்கள் பல சுமந்தலைந்தாயா?
இல்லை என்றேனும் தவறியும் சந்திப்பதாகாது
என சற்றே மறைந்து வாழத் தலைப்பட்டாயா?
அருகன் அருமை பெருமைகள்
உன் செவி சேர்ந்த கணத்தில்
சிற்றலை தழுவிய பாதமென சிலிர்த்தாயா?
இல்லை நரகல் பட்ட அசூசையில் மெல்ல நகர்ந்தாயா?
விடை கொடு என்றொரு வார்த்தைக் கூறியிருப்பின்
வாழ்த்தி வணங்கி வழிவிட்டு ஒதுங்கிடும்
உன் மாண்பறியாது நீங்கிய கோழைத்தனந்தனை
ஒரு கணமேனும் மன்னிக்க விழைந்தாயா?
இல்லை மறக்க நினைத்தாயா?
என்னவெல்லாம் செய்துன்னை வென்றாய்
எம் தாயே யசோதா!!!!!
                                                      - ஶ்ரீதேவி ரம்யா



                          ******************************************************************




நீங்கள் என்னை சூத்திரன்
என்றழைத்தபோது.?
என் கையில் சவரக் கத்தி
இருந்தது.
என் கையில் பிணமெரிக்கும்
கட்டை இருந்தது.
அனல் தின்னும் பறை காய
தீக்குச்சி இருந்தது.
பல புதுச் செருப்புகள் தைத்தே
இருந்தது.
நீங்கள் நம்பிக் காட்டிய
குரல்வளையை
கிழித்தாரில்லை.!
தன்னந்தனி சுடுகாட்டில்
பயந்துபோய்
வந்தாரில்லை..!!
நீங்கள் எரித்தீரென்று
பதிலுக்கு
எரித்தாரில்லை..!!!
கண்டதும் கழட்டச் சொன்னீர்
செருப்பை - இருந்தும்
கிழிந்த உம் செருப்பை 
தைக்காதவரில்லை.?
இன்றோ பேனா பிடித்துவிட்டோம்.
பிரபஞ்சம் சுற்றுகின்றோம்.
ஜில்லெட் கொண்டு
சிரைத்துக்கொள்.!
மின் சுடுகாட்டில்
சாம்பல் அள்ளு.!!
சத்தமில்லாமல்
காடு சேர்..!!!
கிழிந்தால் தூக்கியெறி.
உனக்கும் எனக்கும் ஒரே
வடிவ 'தீ' தான்
கனன்று கொண்டிருக்கிறது

                             -வினையன்

                         ************************************************************



                   *****************************************************************************